சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 14 அக்டோபர், 2008

வின்சென்டின் அனுபவக் குதிர்

Thursday October 9, 2008


வின்சென்டின் அனுபவக் குதிர்


=----------- சுப்ரபாரதிமணியன் --------------



உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது என்கிறார்கள். ஆனால் நமது அனுபவங்கள், வாக்கையின் தினப்படி நடவடிக்கைகள் என எல்லாமே சுருங்கி விட்டன. செக்கு மாட்டு அனுபவங்கள். வெறுமையும் அலுப்பும் மேலும் மேலும் நம்மை பிடித்து அழுத்தும் நிர்பந்தங்கள். நமது அனுபவங்களோடு எவ்வித சம்பந்தமும் இல்லாதபடி பிற ஊடகங்களும் நம்மை அன்னியமாக்கியிருக்கின்றன.


இந்த சூழலில் பிற அனுபவங்களையும் தன் அனுபவம் போல் வரித்துக் கொண்டு எழுதுபவர்களே நிறைய எழுத முடியும். பிறரின் அனுபவங்களையும் எழுத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். சாதாரண வாழ்க்கையில் நாம் சந்தித்திருந்தாலும் அவர்களோடு அளவளாவுதல் மூலம் உறவாட முடியும்.


இந்த பாக்யம் இலா.வின்சென்ட்டிற்கு வாய்த்திருக்கிறது. வெவ்வேறு வகையான மனிதர்கள்,கதாபாத்திரங்கள் மூலம் இக்கதையில் பல அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். சொந்த அனுபவம் சார்ந்த விடயங்களை மட்டுமே எழுதுவேன் என்று வெறுமையை திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் வெவ்வேறு வகையான களனும், அனுபவங்களின் உள்வாங்கலும் வின்சென்டிற்கு வாய்த்திருப்பது அபூர்வமானது. இந்த அனுபவங்களை அவர் žரான குரலில் வெளிப்படுத்துகிறார். இயல்பான வெளிப்பாட்டு மொழியும், முறையும் வாசகர்களை சுலபமாக நகரச் செய்யும்.


ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களங்களில். இப்படி ஒவ்வொரு படைப்பிற்கும் வெவ்வேறு அனுபவங்களைக் கொண்டு எழுத முயல்வது சாதாரணமானதல்ல. ஜல்லிக்கட்டு சூழல், ரவிக்கைபோட முடியாத கலாச்சார சிக்கல், நாத்திகவாதியின் சபலம், கிறிஸ்துவ குடும்பங்களின் பின்னணி, பனையேறும் வாழ்க்கையினர், முஸ்லீம்களின் கலாச்சார நெருக்கடிகள், சாவு வேலை வாய்ப்பை தரும் என்ற நெருடல், கொத்தடிமைகளாய் நெசவாளர்கள், மருமகளை தன் கொடுமை மகனிடமிருந்து விடுவிக்க ஆசைப்படும் முடமான அத்தை, ஆதி திராவிடர்களும் தர்மகர்தாக்களும் மோதும் தெலுங்கு மொழிப் பின்னணியிலான சிக்கல்கள், ஓரின பாலுறவாலர்களின் திருமண விரிசல் என விரிந்து கொண்டே போகின்றன.


"போராட்டம் பல கண்களாய் முளைத்து விளித்தன" எனும் வின்சென்ட்டின் வார்த்தைகள் பலரை போராட்டக் களத்திற்கு தள்ளும் சில மாதிரி கதாபாத்திரங்களை லட்சிய வேகத்துடன் படைத்திருக்கிறார். நாத்திகவாதியாக இருந்து வாழ்ந்து முடிக்கப் போகிறவர் வளர்ந்துவிட்ட குடும்ப நபர்களிடம் தொடர்ந்து போராடவே வேணியிருக்கிறது. அமலா போராடி வெற்றி பெறுவது சாதாரணமல்ல.பனையேறும் மக்களின் பிரச்சனைகளோடு போராட்ட உணர்வும் வலுப்பெறுகிறது. இந்த உணர்வுதான் கொத்தடிமையிலிருந்தும், பாலியல் அடக்குமுறையிலிருந்தும் விடுபட நெசவாளர்களை உந்துகிறது. சிறுநீர் கிட்னியைக் கூட தானம் செய்ய முனைகிறது. ஜாதீய இறுக்கங்களின் மத்தியில் உள் ஒதுக்கீட்டுப் பிரிவுகளின் மோதல் குரூரமாய் முன் வைக்கப்படுகிறது. பாலியல் சுதந்திரம் கோரி வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் தங்களின் கருத்துக்களை மீறி வாழ்க்கையைப் பார்க்கிறார்கள்.


வாழ்க்கையின் துயரங்களுக்கு மத்தியிலும் சின்னச் சின்ன சந்தோஷங்களை தேடி அடைகிறார்கள். பாலியல் அனுபவங்களை விவரிக்கும் போக்கிலும் தன்மையிலும் நேர்ந்த நுணுக்கங்கள் வெளிப்படுகின்றன. இன்ப ரகசியங்களாய் அவை வழிந்து உரைநடையை மினுங்கச் செய்கின்றன.


விளிம்புநிலை மக்களின் அனுபவங்களைச் சார்ந்தே வின்சென்ட் இயங்குகிறார். அவர்களின் சார்பாக குரல் கொடுக்கும் தொனியை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் குரலோ, தொனியோ உரக்க அமைய வேண்டியதில்லை என்பதையும் அறிந்திருக்கிறார். கருத்துக்களின் மோதலின் களமாய் சில சிறுகதைகளையும் முன் வைக்கிறார். அவற்றை உரையாடல் தன்மையில் வைக்கும் போது பிசிறு தட்டுவதில்லை. அவை விவாதத்திற்குரிய கருத்துக்களாகவும் மாறி விடுகின்றன. இந்த வகை விவாதங்களை உருவாக்குவது படைப்பின் வெற்றியாகக் கூட கொள்ளலாம். முஸ்லீம் மக்கள் வாழ்க்கையோ, தலித் மக்களின் உள் பிரச்சனைகளோ, கிறிஸ்துவ அனுபவங்களோ, தெலுங்கு குடும்ப சூழலோ வெளிப்படுத்தும் போது அந்தந்த சூழலும் மொழியும் சார்ந்து மாறுவதும் நுணுக்கமாவதும் உவரின் தேர்ந்த பார்வையைக் காட்டுகிறது. அவற்றில் பயன்படுத்தப்படும் மொழி மென்மையானதாகவும், பொதுவானதாகவும் இல்லாமல் நுணுக்கத் தனித் தன்மையுடன் விளங்குவது சிறப்பியல்பாகக் கொள்ளலாம்.


அய்யம்மாள் ஆஸ்த்துமா தொல்லையில் அவதியுறுவதைப் பற்றி ஒரு கதையில் வரும் சித்தரிப்பு வெகு நுணுக்கமானது. அந்த மூச்சுத் திணறலை நாமும் அனுபவிக்கிறோம். அதை விட்டு விடுபடுவதற்குள் நமக்கும் மூச்சுத் திணறலாகி விடுகிறது. இவ்வகைத் திணறலைத்தான் பல கதைகளில் அந்த மனிதர்களின் சிக்கலோடு ஒப்பிட்டு பார்க்க முடியும். அந்தத் திணறலை உணர வைப்பது இக்கதைகளின் வெற்றியாக இருக்கிறது. இந்த வெற்றியை அடைவதற்கு நுணுக்கமானப் பார்வையும், பகிர்ந்து கொள்ளும் மொழி லாவகமும் வாழ்க்கை குறித்த தரிசனமும் அவசியம். இந்த அவசியத்தை படிக்கிற வாசகனும் உணரச் செய்கிறார். நவீன சிறுகதைகளில் சிலருக்குப் பிடித்தமான குறுகிய கால களன், வெறுமையை விவரித்தல் என்பதைத் தவிர்த்து, விரிந்த தொனியில் கதை சொல்லுவது என்ற பழைய பாணி சில இடங்களில் மிகையாக உறுத்தவே செய்கிறது. கதையை குறுகிய கால அளவிலிருந்து நெடுங்காலத்திற்குக் கடத்திச் செல்கிறது.


கலைடாஸ்கோப்பின் பலவர்ணங்களின் ஜாலத்தைப் போல பலவகை மனிதர்களின் நுணுக்கமான அனுபவங்களால் தன்னை நிறைத்துக் கொண்டிருக்கிறார் வின்சென்ட். இந்த அனுபவக் களனில் அவர் புரண்டெழுந்ததில் இது ஒரு பகுதிதான். இன்னும் கொட்டித் தீர்க்க வனுபவங்கள் குவிந்து கிடக்கிற மனித பிம்பம் அவர்.



- சுப்ரபாரதிமணியன்



மீண்டெழுதல்: இலா வின்செண்டின் சிறுகதைகள்: வெளியீடு: அமிருதா பதிப்பகம், சென்னை ரூ 80/-




Copyright:thinnai.com