சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 6 அக்டோபர், 2009

சமநிலையை குலைக்கும் சமன்பாடுகள்


கோடை தகித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வருடம் போல எப்போதும் இல்லை. இந்தக் கொடுமையை எப்படி சகித்துக் கொள்வது? எவ்வளவு மழையென்றாலும் சகித்துக் கொள்ளலாம். எவ்வளவு பனி என்றாலும் தாங்கிக் கொள்ளலாம், ஆனால் இந்த வெயிலின் கொடுமையை மட்டும் தாங்க முடியாது என்ற புலம்பல் கேட்பதுண்டு. சென்றாண்டின் கோடையில் நண்பர் ஒருவர் தனது சிறு மகிழ்வுந்துவின் ஓட்டுனரை என் கண் முன்னால் வேலை நீக்கம் செய்த சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த ஓட்டுனர் வீதிகளில் சென்று கொண்டிருக்கும்போது அழுக்கானவர்களை, வீதிகளில் நிற்கிற மனநோயாளிகளைக் கண்டால் வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு அவர்களை நெருங்கி, கும்பிடுவார். தீர்க்கமாய்ப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருப்பார். பக்கத்தில் கடைகள் ஏதாவது தென்பட்டால் ஓரிரு வாழைப் பழங்களை வாங்கி பிரசாதத்தைத் தருவது போலவோ, குருவிற்கு தட்சணை தரும் பாவனையிலோ அதைத் தருவார். அவர்களை ‘சித்தர்கள்’, ‘ஞானி’ என்பார். அவர் ‘சித்தரை’ தினந்தோறும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருக்கும். மகிழ்வுந்துவின் சொந்தக்காரரான நண்பருக்கு மனநோயாளிகள் என்றாலே அலர்ஜி. பார்த்து பயப்படுவார். அவர்கள் பார்வையில் படாதவாறு ஓடி ஒளிவார். ஓட்டுனரின் ‘சித்த தரிசனம்’ அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அவரை வேலைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அந்த ஓட்டுனர் அவருடன் இருந்தவரை எவ்வித விபத்தும் நடந்ததில்லை. ஆனால் வேறு ஓட்டுனர்கள் அவரின் ஊர்தியை உபயோகிக்கும்போது விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் அந்த ஓட்டுனரை மீண்டும் வேலைக்கு எடுப்பதில் அவருக்கு நிறைய சிக்கல்கள் இருந்திருக்கின்றன. ஓட்டுனரைப் போல மனநோயாளிகளை சித்தர்கள் என்று 'கணித்து' கொண்டாடுபவர்கள் உண்டு. அதே சமயம் அவர்களின் அழுக்கான உடல், பதற்றம், நிலையில்லாமல் இருத்தல், பிறரைத் தாக்குதல், வீட்டுப் பொருட்களை துவம்சமாக்குதல் போன்ற நடவடிக்கைகளால் அவர்களை நிரந்தர வியாதியஸ்தர்களாகக் கண்டு பயப்படுகிறவர்களே அதிகம் இருக்கிறார்கள்.

வீட்டில் அவ்வகை நோயாளிகளைப் பாதுகாத்துப் பேணி வருகையில் உண்டாகும் மனப்பதற்றத்திற்கு அளவேயில்லை என்று சொல்லலாம். யார் வேண்டுமானாலும் நோயாளியின் நோய்த் தன்மையை முன் வைத்துக் கேள்வி கேட்பார்கள். பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கும். தப்பித்துவிட முடியாது. வேறு எந்த நபரின் குடும்பச் சூழலிலும், அந்தரங்கத்திலும் யாரும் தலையிட்டு எந்தச் சிறு கேள்வியையும் கேட்டுவிட முடியாது. ஆனால் மனநோயாளி பற்றி எழுப்பப்படும் எவ்வகைக் கேள்விக்கும் ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டியிருக்கும். பதில் சொல்லாத போது அந்த நோய்க்கான காரணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தலைவர் மீது சுலபமாக சுமத்தப்பட்டுவிடும்.

என்னிடம் அவ்வகைக் கேள்விகள் குடும்ப உறவுகள், நண்பர்கள், தெருவில் வருவோர் போவோர் உட்பட பலரால் கேட்கப் பட்டு நான் தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டிருப்பேன். அந்த நோயின் மூலம் என்ன என்ற கேள்வி சாதாரணமாய் எல்லோராலும் வைக்கப்படுவதுண்டு. “எப்பிடி வந்தது”. அவர்களின் குடும்பத்தில் வேறு யாருக்கோ இருந்திருக்கலாம் என்ற மரபியல் சார்ந்து காரணம் சொல்லப்படுவதை யாரும் சாதாரணமாக ஏற்றுக் கொண்டதில்லை. அப்படியென்றால் அவர்களின் குடும்பத்தில் மற்றவர்களுக்கு ஏன் அது வரவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடிந்ததில்லை. அடுத்த கட்டமாய் மூளையிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும். மூளை திரவத்துள் மிதக்கிறது. தண்ணீரில் வெண்ணையைப் போட்டால் மிதப்பது போல. அந்த திரவம் வற்றிவிட்டாலோ, திரவம் சுரக்கும் சுரபியில் கோளாறு என்றாலோ இவ்வகைத் தடுமாற்றமும் கோளாறும் வருவதுண்டு. அதனால்தான் கிராமங்களில் கோபமும், எரிச்சலுமாய் அலைகிறவர்களைக் கண்டு “மூளைத் தண்ணி வத்திப் போச்சா” என்று சாதாரணமாய்க் கேட்கப்படுவதுண்டு. இன்சுலின் சுரக்காத போது அது ஏற்படுத்தும் தொல்லைகளைப் பட்டியலிட்டுவிட்டு அதைச் சுரக்க வைப்பதற்காக ஊசியும் மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுவது போல மூளையின் சுரப்பி செயல்பாடுகளுக்காக ஊசி, மாத்திரைகள் மனநல மருத்துவர்களிடம் பெற வேண்டியிருக்கிறது என்று சொல்வேன். மூட்லே திரவம் வத்திப்போனா மூட்டு வீங்கி நடக்க முடியாதே, அது மாதிரி என்றும்.

அந்த ஊசிகளும், மாத்திரைகளும் அவர்களைத் தொடர்ந்து தூங்க வைத்துக் கொண்டேயிருக்கும். அவித்த உணவுப்பண்டம் போல கிடக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு வேலைக்கும் குறைந்தது ஐந்து மாத்திரைகளாவது இருக்கும். பல சமயங்களில் முந்தின வேளையில் சாப்பிட்ட மாத்திரையின் வீர்யம் இன்னும் குறையாத நிலையில் அடுத்த வேளை மாத்திரையைச் சாப்பிட கண்களைத் திறக்க முடியாதபடி கண் இமைகள் ஒட்டிக் கொண்டிருக்கும். நிலைமை மோசமாகிற போது தரப்படும் மின் அதிர்வு அதிர்ச்சி முறை இன்னும் பார்க்க வேதனைப்படுத்தும். இரண்டு சுற்று, மூன்று சுற்று மின் அதிர்வு சிகிச்சைக்குப் பிறகுகூட சற்றும் தெளிவு வந்திருக்காது. இன்னும் ஓரிரு சுற்று மின் அதிர்வு சிகிச்சைக்குப் பின்னரே சற்று தெளிவு கிடைக்கும். “என்ன டாக்டர் எப்பப் பாத்தாலும் இப்பிடியே தூங்க வேண்டியிருக்கு?”

டாக்டர் : “நீங்களாவது தூங்குங்கம்மா. நாங்க பேசண்ட்டுகளை தினமும் ராத்திரி பதினோரு, பனிரண்டு மணி வரைக்கும் பாக்க வேண்டியிருக்கு, தூங்கக்கூட நேரம் கெடைக்கறதில்லை.” - மனநல தனியார் மருத்துவமனைகள் இரவிலும் நிரம்பி வழிகின்றன. அதில் ஒரு மருத்துவர் சொன்னது இது. அவர் ஒரு மனநல விடுதி ஆரம்பித்தார். இருக்கும் மனநல விடுதிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை, சிகிச்சைமுறை சரியில்லை என்று குற்றம் சாட்டினார். அவரிடம் சேர்க்கைக்காக அணுகியபோது அவர் சொன்னார் : “ஒரு லட்சம் ரூபாய் திருப்பித் தர முடியாத பணம் எனக்கட்ட வேண்டும். No refundable deposit. அப்புறம் மாதம் ஆறாயிரம். “தொகை அதிகமாய் இருப்பதாய்ச் சொன்னால் வரும் பதில் : “வீட்ல வச்சு பாக்கறப்போ எவ்வளவு சிரமப்படறீங்க. தெரியுமில்லே”. மனநல மருத்துவம் பற்றி பத்திரிகை நடத்தும் ஒரு மனநல மருத்துவர் முதியோர் இல்லம் நடத்துகிறார். அவரிடம் மனநல விடுதி ஏன் அவர் தொடங்கவில்லை என்று கேட்டு வைத்தேன். “முதியோர்னா நூறு பேரை கவனிக்க ஒரு ஆளு போதும். மனநோயாளிகள்னா ஒரு ஆளைப் பாக்க நூறு பேர் வேணும். சிவாஜி பட டைலாக் மாதிரி இருக்கில்ல...”

நோயாளிகளின் செயல்கள் குடும்பச் சூழலில் பெருத்த பதற்றத்தை உண்டாக்கிவிடும். Half way Home என்ற மையங்களில் தங்க வைக்கப்பட்டு பயிற்சிகள் தரப்பட்டாலும் (வீட்டில் இருக்கும்போது அவர்கள் மனச்சோர்வு இல்லாமல் வீட்டு வேலைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம், முறைகள், ஓய்வு நேரத்தைக் கழிக்கும் முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி தொடர்ந்து சொல்லித்தரப்பட்டாலும்) அவர்கள் வீடுகளில் இருக்கும்போது சுற்றியுள்ளவர்களின் பேச்சு, நடவடிக்கைகளாலும் அவர்கள் சமநிலையில் இருக்க முடியாமல் போய்விடுகிறது. அப்படி அவர்கள் தனித்திருந்தாலும் தொலைக்காட்சி தரும் வன்முறை, பாலியல் சார்ந்த காட்சிகள் அவர்களை வெகுவாக சமநிலையிலிருந்து விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடும். (இன்றைக்கு விளிம்பு நிலை மாந்தர்களாக அவர்கள் பட்டியல் போடப்படுவதற்கு இதுதான் காரணமோ. பின் நவீனத்துவக் கூறுகளைக் கொண்டவர்களாக அவர்களின் செயல்பாடும் நிலைகளும் மாறிப் போய்விடுகின்றன. அதிகாரக் கட்டமைப்பைக் குலைக்கிறவர்களாகிறார்கள்.) அதனால்தான் என்னவோ பின்நவீனத்துவம் கொண்டாடும் சிறு தெய்வ வழிபாட்டு முறைகளுக்குள் அவர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றனரோ என்னவோ. சிறு தெய்வ வழிபாட்டு விதிகளிலுள்ள மந்திரித்துக் கட்டுதல், கெடாவெட்டுதல், பூஜை புனஸ்காரங்கள், மாவில் பாவை செய்து ஊசி குத்துதல், கோயில் கிணற்று நீரில் குளித்தல் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மருத்துவமனைகளிலோ, விடுதிகளிலோ தங்க வைக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்ட பின்பு ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ளும் போது நோயாளிக்கு நோய்க் கூறுகளை உண்டாக்கும் சமூகச் சூழலுக்குள் அவர்கள் மீண்டும் மீண்டும் தள்ளப்படுவதுகூட ஒருவகை வன்முறையோ, அதிகாரமோ என்று படுகிறது. செய்வினை காரணமாக இது வந்து சேர்ந்துவிட்டது என்று நம்புகிற சதவிகிதமே அதிகமாக இருக்கிறது. ஓஷோவின் சீடர் ஒருவர்; பல வருடங்களில் அவரின் கம்யூனில் வாழ்ந்தவர், தியானமும், யோகமும் பயிற்சி செய்கிறவர், ஓரளவு இயற்கை உணவு உண்பவர்; இந்தச் செய்வினையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். எந்தப் பகுத்தறிவு, விஞ் ஞானக் கருத்துகளையும் இதன் பொருட்டு ஏற்றுக் கொள்வதில்லை. அவர் இதை மூளை சம்பந்தமான நோயல்ல, செய்வினையினால் வந்தது என்று வாதாடுவார். அவர் குடியிருந்த இடத்தை காலி செய்யச் சொன்னார்கள். அவர் மறுத்த அடுத்த நாள் அவரது இடதுகால் இயங்க மறுத்தது. நடக்க முடியவில்லை. இது அந்த வீட்டுக்காரனின் சூனியம் வைக்கத் தெரிந்த சகோதரியின் செய்வினை என்று திடமாக நம்பினார். செய்வினைக்கு சிகிச்சை பெற மறுத்து மாதக்கணக்கில் அப்படியே இருந்தார். படித்தவர்களுக்கே இது ‘செய்வினை’ வியாதி என்ற ‘பெரும் நம்பிக்கை’ இருக்கிறது.

வியாதி வந்தவர்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று துருதுருத்துக் கொண்டிருப்பார்கள். அதைப் பார்க்கும் மருத்துவரும் ஏதாவது சிகிச்சை செய்ய வேண்டும் என்று கணக்கில் வைத்துக் கொள்வார்கள். பிரசவம் என்று வந்துவிட்டால் சிசேரியனுக்கு பெண்களை உடனே தயார்படுத்துவது போல, இவ்வகை நோயாளிகளின் பரபரப்பைப் பார்க்கிறபோது மருத்துவர்களும் “ஏதாவது செய்ய வேண்டும்” என்று சிசேரியன் வகையில் 'மின்அதிர்வு சிகிச்சைக்கு' போய்விடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்து கூட இருக்கிறவர்கள் வெகுவாகக் கலக்கமடைந்து விடுவார்கள். இந்தக் கலக்கத்தைப் பார்த்து பல மருத்துவர்களுக்குக் குழப்பம் வந்துவிடும். பல சமயங்களில் “நீங்கதானே பேஷண்ட்” என்று என்னிடம் கேட்டு விடுவார்கள். தலையசைத்து மறுத்தால் நம்பமாட்டார்கள். நின்று நிதானித்து பேசுவதைக் கவனித்து விட்டு “நீ பேஷண்ட் இல்லை” என்று ஒப்புதல் தந்து விலக்கி விடுவார்கள். (“நீயும் சீக்கிரம் பேஷண்ட் ஆகப் போகிறவன்தா” என்ற கேலிப் பார்வையுடன் பார்ப்பது போல இருக்கும்). நண்பர் ஒருவர் மருத்துவமனைக்கு கூடப் போனவரை ‘பேஷண்ட்’ என்று ‘பேஷண்ட்டே’ அடையாளம் காட்டிவிட, அவர் ‘பேஷண்ட்டுகளுள்’ அடைக்கப்பட்டார். அது ஒரு தனிக்கதை.

அதிகமாக எழுதுவதே நோய்த்தன்மையினால் என்பார்கள். இந்த மனச்சோர்வு வியாதி படைப்பிலக்கியத்திற்கும் வழி வகுப்பதை, பல இலக்கியவாதிகளின் பெயர்களை முன் வைத்துச் சொல்லிவிடலாம். படைப்பிலக்கியம், எழுத்து இவற்றுக்கு இந்த மூளை நோய் எப்படி மூலமாகிறது என்று உளவியலாளர்கள் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

மீண்டும் கோடைக் காலத்திற்குத் திரும்பலாம். கோடை தகிக்கிறது. இந்தக் கோடைக்காலத்தில் பெரும்பாலும் மனநல மருத்துவமனைகள் நிரம்பி வழியும். ஆசியக் கண்டத்தின் சுட்டெரிக்கும் வெயில் இப்பகுதியில் இந்த நோய்க்கான முக்கியமான காரணமாய் சொல்லப்படுவதுண்டு. பௌர்ணமி, அமாவாசை மற்றும் அவற்றின் முன் பின் தினங்களில் அவர்களின் பரபரப்பும், படும் அவஸ்தைகளும் சொல்லிமாளாது. ஏதாவது விபரீதமாய் நடந்தே தீரும். எதையாவது உடைத்து, யாரையாவது காயப்படுத்தி, அல்லது அவர்களே காயப்படுத்திக் கொள்வர். பௌர்ணமி, அமாவாசை தினங்களில் அவர்களின் பரபரப்பு செயல்பாடுகளுக்கான நியாயங்களை உளவியலாளர்கள் வெயில் காலத்தை முன் வைத்தும் விளக்குவது நல்லது. நான் பல மருத்துவர்களிடம் இதை முன் வைத்திருக்கிறேன். “ரொம்ப பிஸி, இதுக்கெல்லா பதில் சொல்ற மாதிரி நேரம் இல்லை. அப்புறம் பார்க்கலாம்”. ஆனால் அவர்களே நோயாளிக்கான ‘கவுன்சிலிங்கிற்கு’ பணம் கட்டி சீட்டு பெற்று நோயாளிகளை உட்காரவைத்து கேள்விகள் கேட்டு பதில் பெற்று காசு சம்பாதிக்க நேரம் ஒதுக்குவதுண்டு. ஆல்பர்ட் காம்யுவின் ‘அந்நியனில்’ வரும் பிரதான பாத்திரம் துப்பாக்கியால் சுட்டதற்கான காரணத்தைச் சொல்கிறபோது சுட்டெரிக்கும் வெயிலைக் குற்றம் சாட்டுவது ஞாபகம் வருகிறது. கோடையில் அவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லிமாளாது.

மாரடைப்போ, தற்கொலையோ, வயதாகி இறத்தலோ என்று நிகழ்ந்து இந்தக் கொடுமையான கோடையில் இருந்து‘தப்பித்தவர்கள்’ குறித்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். அவர்களுக்கான அஞ்சலியை சற்றே நிதானமாய் எவ்விதப் பரபரப்பும், துருதுருப்பும் இல்லாமல் செலுத்துவதில் பெருமூச்சு கிளம்புகிறது.


http://www.uyirmmai.com