சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 8 மே, 2010

மலையாளிகளின் சிம்மாசனங்கள்


கேரள சர்வதேசத் திரைப்படவிழாக்களில் முன்பெல்லாம் குறும்படங்கள் திரையிடப்படுவதுண்டு. முழு நீள திரைப்படங்களுக்கு முன்னாலும், சில குறும்படங்களின் தொகுப்பாகவும், தனிக்காட்சியாகவும் அவை இடம் பெறுவதுண்டு. ஆனால் இவ்வாண்டு அவ்வகையில் குறும்படங்கள் இடம் பெறவில்லை. குறும்படங்களுக்கென்று தனித்து. திரைப்படவிழாக்கள் நடைபெறுவதும், முக்கியத் திரைப்படம் திரையிடும்போது குறும்படங்கள் திரையிடப்படுவது ஏதோ வகையில் சிறு இடைஞ்சலாக அமைந்து விடுவதும், முழுத் திரைப்பட ரசிப்பு நிலையில் சிறு தொந்தரவு என்றாகி விடுவதும் தென்படும் காரணங்களாக இருக்கலாம்.
பத்து குறும்படங்கள், பத்து இயக்குனர்களின் இயக்கம், அவை அனைத்தும் பயணங்களின் அடிப்படையில் அமைந்தவை. இவற்றை இணைத்து ‘கேரளா கபே’ என்ற முழு நீளப் படமொன்று இரண்டரை மணி நேர அளவில் வெளிவந்திருப்பது நல்ல முயற்சியாகத் தென்படுகிறது. புகழ்பெற்ற இயக்குனர்கள் சியால் பிரசாத், லால் ஜோஸ், ஷாஜி கைலாஸ், உன்னிகிருஷ்ணன், ரேவதி, அன்வர் ரசீத், பத்மகுமார், அஞ்சலி மேனன், உதய் கந்தன், சங்கர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இயக்குனர்கள். மம்முட்டி, சீனிவாசன், சுரேஷ் கோபி, பிருதிவிராஜ், சாந்தா தேவி, திலீப் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். பத்து வெவ்வேறு கதைகள், கதாபாத்திரங்கள் புகைவண்டி நிலையத்தின் உணவு விடுதியில் தென்படுவது இணைப்பு அம்சமாக இருக்கிறது.
இதில் தமிழ்ச் சூழ்நிலை, கன்னியாகுமரியை மையமாகக் கொண்டு ரேவதி இயக்கியிருக்கிற ‘மகள்’ படம் கல்குவாரியைச் சார்ந்த தமிழ்க் குடும்பமொன்று மகளை ஒரு பணக்காரனுக்குத் தத்து கொடுக்கிறது. அப்பெண் விபச்சார விடுதிக்குக் கொண்டு போகப் படுகிறாள். தமிழ் வசனங்களும், தாலாட்டுப் பாடல்களும் தமிழ்ச் சூழலைக் கொண்டு வர முயன்றிருக்கின்றன. இந்தப் பத்து இயக்குனர்களில் இன்னொரு பெண் இயக்குனர் அஞ்சலி மேனன், இவரின் குறும்படத்தில் ஒரு இளம்பெண்ணின் பேருந்து பயணத்தின்போது அமர்கிற ஆணின் சபலங்களும் அதை அப்பெண் எதிர்கொள்ள வெடிகுண்டு புரளியை அவனிடம் சொல்வதும் பற்றிய கலகலப்பான படமாகும். இளம்பெண் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார் அஞ்சலி மேனன். பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக புனைகதை எழுத்திலும், கட்டுரைகளிலும் அக்கறை கொண்டு இயங்கி வந்தவர். சென்றாண்டில் ஹாசன் குட்டி நினைவுப் பரிசு பெற்ற ‘லக்கி ரெட் சீட்’ அவரின் குறிப்பிடத்தக்க படமாகும்.
இந்திய பனோரமா பிரிவிலும், மலையாளப் படங்கள் பிரிவிலும் மலையாளப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆறுதலான விஷயமாக இருக்கிறது. முன்பெல்லாம் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்த கலைவகைப் படங்கள் இடம்பெறும். இப்போது அடுத்த நிலையில் இருக்கிற நடிகர்களை முன்னணியாகக் கொண்டு மலையாளத் திரைப்படங்கள் வெளிவருவது ஆரோக்கியமானதாக இருக்கிறது. இது புது இயக்குனர்களின் படைப்புகளுக்கு வழி கோலுகிறது. ஆனால் கேரளாவில் ‘பாக்ஸ் ஆபீஸ்’ தமிழ்ப் படங்களின் வெற்றியும், அந்தப் பாதிப்பினாலான மலையாளப் படங்களும் முகம் சுளிக்கவே வைக்கிறது.
மலையாளிகளின் யதார்த்த வாழ்க்கையை முன்வைத்த படங்கள் அறுபதுகளில் நிறைய வெளிவந்திருக்கின்றன. இலக்கியப் பிரதிகளின் திரைப்பட ஆக்கமும் பின்னால் செழுமை சேர்த்திருக்கிறது. எழுபதுகளில் திரைப்படச் சங்கங்களின் எழுச்சி நல்ல திரைப்படங்கள் வெளிவர உதவியிருக்கிறது. எண்பதுகளின் இந்தியத் திரைப்பட அம்சங்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் நல்ல திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. கடந்த பத்தாண்டுகள் அந்த வகையில் இருந்து வேறுபட்டு வெகுஜன திரைப்பட உலகின் அம்சங்களுக்குள் தள்ளிவிட்டது. படைப்பிலக்கிய மரபிலும், பரிசோதனை முயற்சிகளிலும் செழுமை சேர்த்த மலையாளத் திரைப்படங்களின் தரம் கேள்விக்குறியாக்கப்ப்டடிருக்கும் நேரத்தில் நடுவாந்திரப் படங்களின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை ஆறுதல் தருவதாகவே அமைந்திருக்கிறது.
‘பத்தாம் நிலையில் தீவண்டி’ படத்தின் முக்கிய கதாபாத்திரம் இன்னொசண்ட். இவ்வகைப் படங்களில் முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் பெருமைக்காக இவ்வகை படங்களில் நடித்த போக்கு மீறி இரண்டாம் நிலை நடிகர்களை முன்னணியாளர்களாகக் கொண்டு படங்கள் வெளிவர ஆரம்பித்திருப்பதன் அறிகுறியாக இருக்கிறது. சங்கரன் என்ற பிரதான கதாபாத்திரம் பணியில் இருக்கும்போது குடித்திருந்ததற்காகப் பணிநீக்கம் செய்யப்படுகிறார். புகைவண்டிகளின் இயக்கமும் தொடர்ந்த சப்தமும் அவரைக் குடிக்க செய்விக்கிறது. மனநிலை பாதிப்பப்பட்டவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவர் தன்னை வந்து யாரும் பார்க்காத நிலையில் தொடர்ந்து தன் மகன் ராமுவிற்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டே இருக்கிறார். பதில் எதுவும் வருவதில்லை. ராமு ஒரு பொறியியலாளனாக உயருகிறான். அவனும் சங்கரனின் மனநோய் அனுபவங்களுக்குள் உட்படுகிறான். இவ்வாண்டில் வெளிவந்திருக்கிற சில நல்ல திரைப்படங்களின் கதையம்சங்கள் கீழே தரப்பட்டிருக்கின்றன.
‘ஓர்க்குக வாலபோழும்’ 70 வயது சேது மாதவன் அவரின் தள்ளாமையை மீறி ஒரு குளிர் இரவில் பதினைந்து மணிநேரம் பயணம் செய்து தான் வசித்த ஒரு பழைய வீட்டை அடைகிறார். சின்னவயது வாழ்க்கையை யோசித்துப் பார்க்கிறார். பாரு என்ற சின்ன வயது சிநேகிதியின் மரணம் பற்றிய செய்திகள் அவரை உலுக்குகின்றன. இதில் சேது மாதவனாக திலகன் நடித்திருக்கிறார். இதன் இயக்குனர் சோஹன்லால்.
‘சூபி பறஞ்ச கதா’ இந்து நாயர் தறவாட்டைச் சார்ந்த ஒரு பெண். முஸ்லிம் வியாபாரி ஒருவனைத் திருமணம் செய்து கொள்வதால் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. ராமுண்ணியின் நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் இயக்குனர் பிரியநந்தன். புதுமுகங்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள். ‘மதிய வேனலின்’ கதாநாயகன் மனோஜ் கே. ஜெயன். பீடி சுற்றும் தொழிலாளர்களின் சங்கத் தலைவனான மார்க்சிஸ்ட் ஒருவர் தனது கட்சி தன்னிடமிருந்து விலகும் நுகர்வு கலாச்சாரத்தின் விபரீதங்களை நுணுக்கமாகச் சொல்கிறது.
டி.வி.சந்திரனின் ‘பூமி மலையாளம்’ படத்தில் வெவ்வேறு காலகட்டத்தின் ஐந்து பெண்களின் நிலையை முன்வைத்துப் பேசப்பட்ட படத்தில், இந்த ஐந்து பெண்களில் பத்மப்ரியாவைத் தவிர்த்து மற்றவர்கள் பிரபலமாகாதவர்களே. சுகுமாரன் ராயரின் ‘ராமனம்’ படம் ஒரு முஸ்லிமால் வளர்க்கப்படும் நிர்க்கதியாக்கப்பட்ட ஒரு இந்துப் பெண்ணின் கலைதாகம் மற்றவர்களால் புறக்கணிக்கப்படுவதைப் பற்றிச் சொல்கிறது. ஷியாம்பிரசாத்தின் ‘ரிது’ படம். ‘தொழில்புரட்சி’யின் நாயகர்களான இளைஞர்களை மையமாகக் கொண்டதாகும். இந்தப் படங்கள் இவ்வாண்டில் வந்திருக்கிற மலையாளப் படங்களின் தேர்வு செய்யப்பட்ட நல்ல படங்களில் சிலதாகும். இந்தப் படங்களின் தேர்விலிருந்து விடுபட்டதாய் இன்னும் 15 படங்களையாவது குறிப்பிடமுடியும். இந்தப் பட்டியல் ஆறுதல் தருவதாகவே இருக்கிறது. இவை முன்வைக்கும் உலக பொருளாதாரத் தாக்கங்கள், நுகர்வு வாதத்தின் உச்சபட்ச விளைவுகள், மக்களுக்கான இயக்கங்களின் தேய்வு, மதரீதியான பகைமைப் போக்குகள் போன்றவற்றை முன்வைத்து இப்படங்கள் வெளிப்பட்டிருக்கின்றன என்பதே சாதனையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது