சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 29 நவம்பர், 2013

நீலகிரி விஷ நீலமாய்...

2010ல் ஒரு மழைக் காலத்தில் ஊட்டி சென்றபோது பயணம் பாதியில் தடைபட்டு திரும்ப நேரிட்டது. அன்றுதான் மழை ஆரம்பித்திருந்தது.
ஆனால் சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்திற்கு பெரும் இடைஞ்சலாய் போய்விட்டது. நீலகிரியில் தென் மேற்கு பருவமழை காலங்களில் இவ்வகை மண் சரிவுகள் இருக்கும். அப்போதுதான் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். வடகிழக்கு பருவமழை காலங்களிலும் கொஞ்சம் சிரமங்கள் இருக்கும். இக்காலங்களில் மக்கள் ஒரு வித பய உணர்ச்சியுடன்தான் இருந்து கொண்டிருப்பர்.

    நீண்ட கால மரங்கள், புதர்கள் நெருங்கியிருப்பது மண்ணை இறுகப் பிடித்து மலையின் உறுதிக்குக் காரணமாக இருக்கும். சாலை விஸ்தாரணம், அழகுபடுத்தல், கடத்தல் என்று மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரியவகை மரங்களும், சந்தன மரங்களும் தொடர்ந்து வெட்டப்பட்டுக் கடத்தப்படுகின்றன. செழிப்பான காட்டுப் பகுதிகள் கேரட் முட்டைகோஸ், உருளைக்கிழங்கு போன்றவற்றுக்காய் அழிக்கப்படுகின்றன. தாதுப்பொருட்களை வெட்டி எடுக்கிற நோக்கத்தில் நிலங்கள் குத்தகைக்கு விடப்படுவது பெரும் சுரண்டலுக்கு வழி வகுத்து விட்டது.

    இமயமலை பல விதங்களில் உயரம் மற்றும் அதன் தொன்மை காரணமாக எப்போதும் பேசப்படுவதாகும். அதேபோல் தொன்மையும், நீண்ட கால பாரம்பரியமும் கொண்டது மேற்குத் தொடர்ச்சி மலை. குஜராத் தொடங்கி தமிழகத்தில் நீலகிரி மலை ஊடாக பாலக்காட்டு கணவாய், ஏழுமலை, கம்பம் பள்ளத்தாக்கு கன்னியாகுமரி வரை 1600 கி.மீ நீளமும், 1,74,700 சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டது. நர்மதா, தப்தி, கோதாவரி முதற் கொண்டு பவானி, வைகை, பெரியாறு உட்பட பல நதிகளின் ஊற்றிடமாக மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது.

அதன் ஒரு பகுதியான நீலகிரியில் உயர்நிலையான பரப்புகள் நிறைய உண்டு. தொட்டபட்டா போன்ற உயர்ந்த மலைச் சிகரங்கள் உள்ளன. தமிழகப் பகுதியில் 3 புலிகள் சரணாலயங்களும், 3 தேசியப் பூங்காக்களும், 8 வனவிலங்கு சரணாலயங்களும் உள்ளன. சமீபத்தில் மத்திய அரசு சுற்றுச்சூழல் ஆணையம் ஒன்று அமைக்கிற திட்டத்தில் தமிழக அரசு அதை எதிர்த்தது. ஆனால் நீலகிரி நீல பூமிப் பகுதியை காக்கிற நடவடிக்கைகள் வழக்கம் போல் சுணக்கமாகத்தான் இருக்கிறது.

    நீலகிரி மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களை கையில் வைத்துக் கொண்டு சுரண்டும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அவர்கள் காலங்காலமாக மலையின் பாதுகாவலர்களாக, மலையை தெய்வமாக வழிபடுகிறவர்களாக இருக்கிறார்கள். இருளர், கோத்தர், தோடர்,  உட்பட ஆதிவாசி இனங்கள் காட்டிற்கு இணக்கமானவர்களாகவே இருந்து வருகிறார்கள். பெரும் மழை காலங்களிலும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தங்களின் வீடுகளை அமைத்து வாழ்கின்றனர். அதிக எடை இல்லாமலும் அதிக உயரம் இல்லாமலும் குளிருக்கு இதமாகவும் காட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்துக் கொண்டு குடில் வீடுகளை அமைத்து வாழ்கிறார்கள். பெரும் மரங்கள் வெட்டப்படும் சமயங்களில் தேவையற்ற மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்படுவதும் மண் சரிவு சிரமங்களுக்கு காரணமாக இருக்கிறது. ஊட்டி மலைப்பாதையில் வைக்கப்பட்ட வாகை மரங்கள் எடை அதிகமானவையாக, பிடிப்புத் தன்மையற்ற மண் அமைப்பில் இருப்பதால் பெரும் சேதங்களுக்கு மழை காலங்களில் உள்ளாகின்றன.

    நீலகிரி மலைப்பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பல பகுதிகளிலும் நீரில் வாழும் உயிரினங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. மிக முக்கியமான பல்லுயிர்களின் மையங்களில் ஒன்றாக மேற்குத் தொடர்ச்சி மலை இருந்து வருகிறது. நன்னீரில் வாழும் பல மீன் வகைகள் மூன்றில் ஒரு பங்கு அழியும் தருவாயில் உள்ளன. இதில் டெக்கான் மஷிர் என்ற உணவு மீன் உண்டு. அலங்கார வியபாரத்திற்காக கேரளா அழகி என்ற மீன் பிடிக்கப்பட்டு, அதன் நீர் நிலைகள் அழிக்கப்பட்டு தோட்டங்கள், தோப்புகளால் மாசுபட்டிருப்பதால் அது மிகவும் குறைந்து வருகிறது. நன்னீர் மீன்களும், நத்தைகள், நீர் வாழ் தாவரங்களும் பல தரப்பட்ட மருந்தாக உபயோகப்படுத்தப்படுவதால் அழிவு அதிகமாகியிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் வட மகாராஷ்டிர பகுதியில் பெரிவிங்கிள் என்ற வகை நத்தைகள் அதிகமான நீர் உறிஞ்சப்படுவதாலும், மாசுபடுதலாலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. அங்கு பீட பூமியில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளும், சுற்றுலா நடவடிக்கைகளும் கூட ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளன.

    நீலகிரி மலையையும் சுற்றுலா ஸ்தலமாக முன்னிலைப்படுத்தப்படுவதை விட பல்லுயிரிகளின் மையமாக மனதில் கொண்டு செயல்பட வேண்டிய சூழலுக்கான தேவைகள் இன்று அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.

- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதி மணியன்